புதுடில்லி : உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை, வாரணாசி மாவட்ட நீதிபதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள வாரணாசியில், விஸ்வநாதர் கோவிலை ஒட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள சிருங்கார கவுரி சிலையை தினமும் வழிபட அனுமதி கோரி, ஹிந்து பெண்கள் சிலர், வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த ‘சிவில்’ நீதிபதி, ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதை, ‘வீடியோ’வாக பதிவு செய்யவும் உத்தரவிட்டார். சிவில் நீதிபதி உத்தரவை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த், பி.எஸ்.நரசிம்மா அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, விசாரணையை ஒருநாள் தள்ளி வைத்த நீதிபதிகள், அதுவரை இது தொடர்பான வழக்கில் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என, சிவில் நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை சிவில் நீதிபதியிடமிருந்து, மாவட்ட நீதிபதிக்கு மாற்ற உத்தரவிடப்படுகிறது. சிவில் நீதிபதி மீது நாங்கள் எந்த சந்தேகமும் எழுப்பவில்லை. இந்த வழக்கை மூத்த நீதிபதி விசாரித்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் தான், வழக்கை மாற்றியுள்ளோம். ‘ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் உள்ளதாக கூறப்படும் பகுதியை பாதுகாக்க வேண்டும்;
மசூதியில் தொழுகை நடத்த முஸ்லிம்களை அனுமதிக்க வேண்டும்’ என, ௧௭ல் நாங்கள் பிறப்பித்த உத்தரவு நீடிக்கிறது.இதற்கு, மாவட்ட கலெக்டர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மசூதியில் மேற்கொண்ட கள ஆய்வு தொடர்பான அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள், வெளியில் கசிவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணை, ஜூலை இரண்டாவது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement