உக்ரைன் போருக்குத் தப்பியோடி வரும் அகதிகளுக்காக பிரித்தானிய மகாராணியாரும், ராஜ குடும்பத்தினரும் இரகசியமாக செய்துள்ள உதவி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மகாராணியாரும் ராஜ குடும்பத்தினரும் உக்ரைன் அகதிகளை தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், ராஜ குடும்ப உறுப்பினர்களில் பலர், புடின் உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து நிகழ்ந்துவரும் துயர நிகழ்வுகளால் மனம் வருந்துவதாகவும், அவர்கள் தாங்களும் தங்கள் பங்குக்கு உக்ரைன் அகதிகளுக்கு உதவ உறுதியளித்துள்ளதாகவும் அரணமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
ராஜ குடும்பத்தினர் ஏற்கனவே உக்ரைன் மக்களுக்காக பெருமளவில் நன்கொடைகள் வழங்கியிருக்கிறார்கள். ஆனால், அதைக் குறித்த விவரங்களை இரகசியமாக வைத்துக்கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
உக்ரைனிலிருந்து சுமார் 54,000 அகதிகள் பிரித்தானிய அரசின் திட்டத்தின்கீழ் பிரித்தானியாவுக்கு வந்துள்ள நிலையில், ரஷ்ய ஊடுருவல் காரணமாக உக்ரைனிலிருந்து தப்பி வெளியேறிவரும் சுமார் ஆறு மில்லியன் உக்ரைனியர்களை பிரித்தானிய அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் பிற பிரித்தானியர்கள் அவர்களைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளார்கள். அவர்களுடன் இணைந்து ராஜ குடும்பத்தினரும் அந்த அகதிகளுக்கு இடமளிக்க முன்வந்துள்ளார்களாம்.
ராஜ குடும்பம் உக்ரைன் அகதிகளுக்காக பல்வேறு திட்டங்களை திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ள பக்கிங்காம் அரண்மனை வட்டாரம், அகதிகளை ஏற்றுக்கொள்ளும் திட்டம் குறித்து விவரிக்க மறுத்துவிட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்தில், உக்ரைனுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், உக்ரைன் கொடியிலுள்ள வண்ணங்களான மஞ்சள் மற்றும் நீல நிறத்தில் பிரித்தானிய மகாராணியார் உடை அணிந்திருந்ததும், விண்ட்சர் மாளிகைக்கு மஞ்சள் மற்றும் நீல நிற மலர்களை ஆர்டர் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.