சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமல் – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சென்னை:
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன. 
137 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
 
இதற்கிடையே, ரஷியா-உக்ரைன் போர் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பால் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்  எரிபொருள் விலை 51 சதவீதத்தை தாண்டி உயர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவில் 5 சதவீதமே எரிபொருள் விலை உயர்ந்துள்ளது என மத்திய அரசு விளக்கம் அளித்தது.
சென்னையில் கடந்த 45 நாளாக  ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. 
இந்நிலையில், மத்திய அரசு கலால் வரியை குறைத்ததைத் தொடர்ந்து இன்று பெட்ரோல் 8.22 ரூபாய் குறைந்து 102.63 காசுகளுக்கும், டீசல் 6.70 ரூபாய் குறைந்து 94.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.