கல்லணை கால்வாயில் கான்கிரீட் தளம்; நிலத்தடி நீர் மட்டத்திற்கு வேட்டு வைக்கும் அரசு?

க.சண்முகவடிவேல், திருச்சி

காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12-க்கு முன்பாகவே, 24.5.2022 முதல் நீரைத் திறந்துவிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாதவாறு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை மே மாதத்திலேயே திறக்கப்படுவது இதுதான் முதல் முறை.

இந்த நிலையில் மேட்டூரில் இருந்து திறந்து வைக்கப்படும் காவிரி நீர் கடைமடைகளுக்கு ஓரிரு மாதத்திற்குள் முழுமையாக சென்றடையும் நிலையில் கல்லணை கால்வாய் ஆற்றில் கான்கிரீட் சிமெண்ட் தளம் அமைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும், கல்லணை கால்வாயில் 3 கி.மீ-க்கு ஒன்று என்றவாறு பல்வேறு தடுப்பணைகளை கட்டி காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து நிறுத்தவேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்த விபரம் வருமாறு; மேட்டூரிலிருந்து திறக்கப்படும் தண்ணீரானது ஈரோடு வழியாக திருச்சி முக்கொம்புவை வந்தடைந்து அங்கிருந்து கல்லணை வந்து அங்கிருந்து கல்லணை கால்வாய் ஆறு மூலம் டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரிந்து செல்கிறது.

இந்த ஆற்றின் மூலம் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 58 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று பெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கல்லணையிலிருந்து கல்லணை கால்வாய் ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு சென்று சேரவில்லை என கூறி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு கல்லணையிலிருந்து கல்லணை கால்வாய் ஆறு முழுவதும் கான்கிரீட் தளம் மற்றும் பக்கவாட்டு கரை சுவர்கள் அமைத்து தண்ணீர் விரைவாக கடைமடை பகுதிக்கு செல்லும் வகையிலும் காங்கிரீட் தளம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்பொழுது கிளியூர் அருகில் அந்தப் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்த கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் இல்லை என்றும், அதனால் ஒப்பந்ததாரர்கள் தரமற்ற முறையில் பணியை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த கான்கிரீட் தளம் அமைக்கும் பணி முடிவடைந்த பிறகு கல்லணை கால்வாய் ஆற்றின் இரண்டு கரைகளிலும் பக்கவாட்டு சுவர்கள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனால் தண்ணீர் விரைவாக கடைமடை பகுதிக்கு சென்று சேர்ந்தாலும் இந்த கல்லணை கால்வாய் மூலம் சென்றடையும் தண்ணீரால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயருமா என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏனென்றால், கான்கிரீட் தளம் அமைப்பதால், தண்ணீர் பூமிக்கு கீழே செல்லாமல் கான்கிரீட் தளம் வழியாக ஓடுவதால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு செல்லும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலை தெரிவிப்பதுடன் பம்புசெட் மோட்டார் மூலம் கூட விவசாயம் செய்வது சிரமம் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதனால் தமிழக அரசு நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்துவிவசாயிகளை விவசாயப் பயிர்களையும் பாதுகாத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகி நம்மிடம் தெரிவித்ததாவது; கல்லணையில் இருந்து பிரிந்து செல்லும் கல்லணை கால்வாய் ஆற்றில் கான்கிரீட் தளம் அமைத்தால் தண்ணீர் வீணாகாமல் தண்ணீர் கடைசி வரை செல்லும் என அரசு தரப்பில் சொல்கிறார்கள் எதார்த்தமாக பார்த்தால் இது ஏற்றுக்கொள்ளகூடியதாக தெரியும்.

இப்படி ஆற்றில் கான்கிரீட் தளம் அமைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடும் கால்வாயின் இருபுறமும் உள்ள விளை நிலங்களில் உள்ள பாம்பு செட்டுகளுக்குக்கூட தண்ணீர் கிடைக்காது. அருகில் உள்ள ஊரனிகள் குட்டைகளுக்கு நீர் ஊற்று கிடைக்காது.

மேலும் கோடைக்காலங்களில் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காது. எனவே, கோடைக்காலங்களில் கால்நடைகள் மற்றும் இதர பயன்பாட்டிற்கு தண்ணீர் கிடைக்க ஒவ்வொரு 3 கி.மீ தூரத்திற்கும் சுமார் 3 அடி உயரத்தில் தடுப்பணை கட்டினால் ஓரளவாவது தண்ணீரை தேக்குவதன் மூலம் பாசனத்திற்கும் பிற பயன்பாட்டிற்கும் தண்ணீர் கிடைக்கும் என்பதால் இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும் கல்லணை கால்வாய் ஆற்றில் அமைக்கப்படும் கான்கிரீட் தளம் தரமற்ற முறையில் இருப்பதாகவும் அதிகாரிகள் யாரும் வந்து பார்ப்பதில்லை என்றும் ஒப்பந்ததாரர்களே தங்களது இஷ்டத்திற்கு பணியை மேற்கொண்டு வருவதாவும் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகி தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.