சட்ட விரோத மதுபான விருந்தில் இளைஞர் உயிரிழப்பு : வி ஆர் மாலுக்கு சீல் வைப்பு

சென்னை

ட்ட விரோதமாக நடந்த மதுபான விருந்தில் கலந்துக் கொண்ட இளைஞரின் உயிரிழப்பைத் தொடர்ந்து வி ஆர் மால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரில் உள்ள கோயம்பேடு அருகே வி.ஆர்.மால் அமைந்துள்ளது. இங்கு உணவகங்கள், துணிக்கடை, செல்போன் மற்றும் நகைக்கடை என அனைத்து வசதிகளும் உள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவதுண்டு. விடுமுறை நாட்களில் இந்த வணிக வளாகம் கூட்ட நெரிசலாக காணப்படும்

இந்த வணிக வளாகத்தில் நான்காவது தளத்தில் பிரேசிலைச் சேர்ந்த ‘MANDRAGORA’ என்ற உலகப் புகழ்பெற்றவரின் பெயரால் DJ ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.  இந்நிகழ்வில் கலந்து கொள்ள ரூ.1500 கட்டணம் பெறப்பட்டுள்ளது.   இந்த நிகழ்ச்சியானது காவல் துறையின் அனுமதியின்றி நடைபெறுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து திருமங்கலம் மற்றும் அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட900க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் மது போதையில் இருந்ததுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு எந்த முன் அனுமதியும் பெறவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து 844 விலை உயர்ந்த மதுபாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த துரை, விக்னேஷ், பரத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு நடனமாடிய தனியார் ஐடி நிறுவன ஊழியர் பிரவீன் என்பவர் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார்.  அவரை மீட்ட நண்பர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இவர் அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்திய  காரணத்தினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானக் கூடங்கள் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அனுமதியின்றி கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் மது விருந்து நிகழ்ச்சிகள் நடத்துபவர்களுக்குக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டவிரோத மது விருந்து நடத்தப்பட்ட வி ஆர் மாலுக்கு கலால் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.