சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 24, 25, 26-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்கோனாவில் 11 செ.மீ., சின்னக்கல்லாறில் 10 செ.மீ., வால்பாறையில் 8 செ.மீ., சோலையாறில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.