கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்

பழமையான தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானாம்பிகை உடனுறை ஞானபுரீஸ்வர் கோயில் வைகாசித் திருவிழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டணப்பிரவேசம் நேற்றிரவு விமர்சையாக தொடங்கியது. தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பல்லக்கில் எழுந்தருளினார்.
மயிலாடுதுறையில் 16-ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில் ஆண்டுதோறும் குருபூஜைவிழா, பட்டணப் பிரவேசவிழா வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 11ம் திருநாள் திருவிழாவான நேற்று ஆதீனத்தை தோற்றுவித்த குருஞானசம்பந்தர் குருபூஜை விழா மற்றும் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம்.
image
இவ்விழாவில் குருமகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கிச்சென்று ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தை அடுத்து கடந்த மாதம் பல்லக்கு தூக்கும் (பட்டணப் பிரவேசம்) நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
image
சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் பல்லக்குதூக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிகொள்வதாக கடந்த 7-ம் தேதி கோட்டாட்சியர் பாலாஜி ஆணைபிறப்பித்தார். இதனால் பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கான எதிர்ப்பார்ப்பு அதிகரிகரித்தது. அதன் விளைவாக, கடந்த காலங்களை விட இந்த ஆண்டு பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு உள்ளதால் டிஐஜி தலைமையில் 2 எஸ்.பி.க்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் நேற்று ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
image
பல்வேறு தடைகளை கடந்து  பட்டணப் பிரவேசவிழா கோலாகலமாக நேற்று இரவு தொடங்கியது. இதில் தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருஆபரணங்கள் அணிந்துகொண்டு திருக்கூட்ட அடியவர்கள் புடைசுழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். யானை, குதிரை, ஒட்டகம் உள்ளிட்ட பரிவாரங்களுடன், நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், புளியாட்டாம், கிராமிய கலை நிகழ்ச்சி மற்றும் பக்கதர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார்.
ஆதீனமடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் பூர்ணகும்ப மரியாதையுடன் குருமகா சன்னிதானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு குருமகா சன்னிதானம் ஆசி வழங்கினார்.
image
புகழ்பெற்ற தருமபுர ஆதீன பட்டிணப்பிரவேச பெருவிழாவில் சைவ ஆதீனங்களான சூரியனார் கோயில் ஆதீனம், மதுரை ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம்,செங்கோல் ஆதீனம், உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து குருபூஜை மடத்தில் வழிபாடு மேற்கொண்டு ஞானகொலுக்காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசிவழங்கினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.