கர்திவாலா : பஞ்சாப் மாநிலம் கர்திவாலா அருகே ஹோஷியார்பூர் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் 9 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
ஹோஷியார்பூர் வயல்வெளியில் விளையாடிய ரித்திக் 6, நாய்கள் துரத்தியதால் பயந்து ஓடியதில் சணல் பையால் மூடியிருந்த ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்தான். 300 அடி ஆழமுள்ள அக்கிணற்றில் 100 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவனை மீட்கும் பணி நடந்தன.ஒன்பது மணி நேர போராட்டத்திற்குப்பின் சிறுவன் மீட்கப்பட்டான். கிணற்றில் இருந்து வெளியே எடுக்கும் போது மயக்கத்தில் இருந்த சிறுவன் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு உயிரிழந்தான். இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இறந்த சிறுவன் குடும்பத்துக்கு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் அவர், ‘ஹோஷியார்பூரை சேர்ந்த 6 வயது சிறுவன் ரித்திக் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தான். சிறுவனின் குடும்பத்திற்கு கடவுள் வலிமை தர வேண்டும். குடும்பத்தின் இழப்பை ஈடு செய்ய முடியாது. இந்த துயர நேரத்தில் அவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என பதிவிட்டுள்ளார்.
Advertisement