ஆஸ்திரேலிய பிரதமராக அந்தோணி நார்மன் அல்பேனீஸ் பதவி ஏற்றார்…

கேன்பெர்ரா: ஆஸ்திரேலிய புதிய பிரதமராக அந்தோணி நார்மன் அல்பேனீஸ் பதவி ஏற்றார். அவருக்கு ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் கவர்னர் ஜெனரல், டேவிட் ஹர்லி ஏசி டிஎஸ்சி (ஓய்வு) பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் பரபரப்பாக நடைபெற்றது. லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசன் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதையடுதுது கடந்த 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இதில் அதிக இடங்களை கைப்பற்றிய தொழிலாளர்கட்சி சார்பில் அந்தோணி நார்மன் பிரதமராக தேர்வானார்.

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் 31வது பிரதமராக  அந்தோணி நார்மன் அல்பேனீஸ் முறைப்படி இன்று (மே 23ந்தேதி) பதவி ஏற்றார். ஆஸ்திரேலியாவின்  கான்பெர்ரா  நகரில் உள்ள அரசு இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை பதவியேற்று கொண்டார். கான்பெர்ராவில் கவர்னர் ஜெனரல், டேவிட் ஹர்லி ஏசி டிஎஸ்சி (ஓய்வு) பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பின்போது, நான், அந்தோனி நார்மன் அல்பானீஸ், நான் ஆஸ்திரேலிய காமன்வெல்த், அதன் நிலம் மற்றும் அவரது மக்களுக்கு பிரதமர் பதவியில் நன்றாகவும் உண்மையாகவும் சேவை செய்வேன் என்பதை மனப்பூர்வமாகவும், உண்மையாகவும் உறுதி செய்து அறிவிக்கிறேன் என உறுதிமொழி ஏற்றார்.

முன்னதாக பதவி ஏற்புக்காக சிட்டினியில் உள்ள தனது வீட்டில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்றார். அந்தோணியுடன் அவருடன் தொழிலாளர் கட்சியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் புதிதாக மந்திரிகளாக பொறுப்பேற்று கொண்டனர். அவருக்கு கவர்னர் ஜெனரல் டேவிட் ஹர்லி பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் நார்மனின் மகன் நாதன் (வயது 21) மற்றும் நார்மனின் காதலியான ஜோடீ ஹெய்டன் ஆகியோரும் கலந்து கொண்டனர். பிரதமர் பதவியேற்ற பின்பு கவர்னருடன் பிரதமர் நார்மன் ஒன்றாக புகைப்படம் எடுத்து கொண்டார்.  இதனை தொடர்ந்து டோக்கியோவில் நடைபெற உள்ள குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அவர் ஜப்பான் செல்கிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தொலைபேசி வழியே நார்மனுக்கு வாழ்த்து செய்தி கூறிய நிலையில், டோக்கியோவில் அவரை நேரில் சந்திக்கிறார். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள், ‘குவாட்’ என்னும் நாற்கர பாதுகாப்பு பேச்சுவார்த்தை அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கிற 2வது உச்சி மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி, நாளை (24ந்தேதி) முடிகிறது. இதில் நான்கு நாட்டு தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.