ஜுன் 1 முதல் படப்பிடிப்பு நிறுத்தம்? – படப்பிடிப்புகள் முடங்க வாய்ப்பு

தமிழகத்தில் சினிமா, டிவி படப்பிடிப்புகளுடன் ஓடிடி தொடர்களுக்கான படப்பிடிப்புகளும் தற்போது அதிக அளவில் நடந்து வருகிறது. இதனால், சினிமா தொழிலாளர்களுக்கான தட்டுப்பாடு அதிக அளவில் இருந்து வருகிறது. வெளிப்புறப் படப்பிடிப்புகளை நடத்துவதற்கென தனி அமைப்புகளும் உள்ளது.

அவுட்டோர் யூனிட் சங்கத்தினர் வரும் ஜுன் 1ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக பெப்ஸி அமைப்பு ஒருவரிடமிருந்து உறுப்பினர் சேர்க்கைக் கட்டணமாக மூன்று லட்ச ரூபாய் வரை வசூலிக்கச் சொல்லி உள்ளதாம். கட்டணத்தை இப்படி அதிரடியாக உயர்த்தியதற்கு அவுட்டோர் யூனிட் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், சினிமா, டிவி, ஓடிடி படப்பிடிப்புகள் ஜுன் 1 முதல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக சினிமா, டிவி படப்பிடிப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வேலை நிறுத்தம் நடந்தால் அது பெரிய பாதிப்பு ஏற்படுத்தும். அதேசமயம் உறுப்பினர் கட்டணத்தை மூன்று லட்சமாக உயர்த்தியதும் தவறான செயல் என தொழிலாளர்கள் கருதுகிறார்கள்.

இது தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.