பெட்ரோல், டீசல் விலை குறைப்பு… எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு பணியுமா தமிழக அரசு?

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. ஆனால், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, சிறிய கால இடைவேளைக்குப் பின் பெட்ரோல், டீசல் விலைகள் தினந்தோறும் அதிகரித்துவந்தன. ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயைத் தாண்டியது. டீசல் விலையும் 100 ரூபாயைத் தொட்டது.

பெட்ரோல்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,000 ரூபாயைத் தாண்டியது. அதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்ந்தன. எனவே, பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் பல மாநில அரசுகளும் வலியுறுத்திவந்தன. இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவல் தொடர்பாக கடந்த மாதம் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அப்போது, “பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைப்பதற்காக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு குறைத்தது. இதேபோன்று, மாநிலங்களும் உள்ளூர் வரியை குறைத்து மக்களுக்கு அந்தப் பலன் போய்ச்சேர உதவ வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. சில மாநிலங்கள் வரியை குறைத்தன. சில மாநிலங்கள் மக்களுக்கு எந்தப் பலனையும் வழங்கவில்லை.

நரேந்திர மோடி

அதனால், அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகமாக உள்ளன. இது, அந்த மாநிலங்களின் மக்களுக்கு செய்கிற அநீதி. மத்திய அரசு சொன்னதை மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கேட்கவில்லை. எனவே, அந்த மாநிலங்களின் மக்கள் தொடர்ந்து சுமையை அனுபவித்து வருகின்றனர்” என்று மோடி குறிப்பிட்டார்.

பிரதமரின் அந்த குற்றச்சாட்டுக்கு சட்டமன்றத்தில் விளக்கம் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். “மாநில அரசு வரிகளைக் குறைக்காத காரணத்தால் தான் பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்க முடியவில்லை என்று பிரதமர் கூறியுள்ளார். இது பற்றி ஒற்றை வரியில் கூறவேண்டுமென்றால், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் தனது கருத்தை பிரதமர் சொல்லியிருக்கிறார். 2014-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்குவந்த பிறகு, சர்வதேச எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துகொண்டே வந்தது. ஆனால், அதற்கு ஏற்றாற் போல விலையை மத்திய அரசு குறைக்காமல், அதன் மூலம் கிடைத்த உபரி வருவாயை தனதாக்கிக்கொண்டது.

முதல்வர் ஸ்டாலின்

மாநில அரசுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய வரியைக் குறைத்து, மாநில அரசுக்கு தரவேண்டிய வரியைக் குறைக்காமல், கடுமையாக வரியை உயர்த்தி மக்கள் மீது சுமையைத் திணித்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய கோடிக்கணக்கான ரூபாய் வருவாயை முழுவதையும் மத்திய அரசு தனதாக்கிக்கொண்டது. பெட்ரோல் விலையைக் குறைப்பதில் உண்மையிலேயே யார் முனைப்பு காட்டுகிறார்கள், விலையைக் குறைப்பது போல் யார் நடிக்கிறார்கள் என்பதை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்” என்று ஸ்டாலின் பேசினார்.

பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைப்போம் என்பது தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதி. அதன்படி, ஆட்சிக்கு வந்த பிறகு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. ஆனால், டீசல் விலையைக் குறைக்கவில்லை. அது குறித்து அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பிவந்தன. இந்த நிலையில், தற்போது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ரூபாயையும் டீசல் விலையை லிட்டருக்கு 6 ரூபாயையும் மத்திய அரசு குறைத்துள்ளது.

பிரதமர் மோடி

இதைத்தொடர்ந்து கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்துள்ளன. அதனால், தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைக்க வேண்டும் என்று என்று பா.ஜ.க., அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மத்திய அரசு இரண்டு தவணைகளாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.13, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.16 என்று குறைத்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த தி.மு.க., பெட்ரோலுக்கு மட்டும் ரூ.3 குறைத்துள்ளது. தேர்தல் வாக்குறுதியை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை.

எடப்பாடி பழனிசாமி

இப்போதாவது பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்க வேண்டும். மத்திய அரசு குறைத்தது போல, மாநில வரியில் குறைந்தபட்சம் பெட்ரோலுக்கு 10 ரூபாயையும், டீசலுக்கு 9 ரூபாயையும் உடனடியாகக் குறைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையோ, “பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைப்பதற்கு தமிழக அரசுக்கு 72 மணி நேரம் காலஅவகாசம் அளிக்கிறோம். அதற்குள் விலைகளைக் குறைக்கவில்லையென்றால், கோட்டையை முற்றுகையிடுவோம்” என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முடியாது என்று கூறும் தமிழக அரசு, மேலும் வரிகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று கூறுகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை மாநில அரசு குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெளிவாகக் கூறிவிட்டார்.

பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உயர்த்தியபோது, அது தொடர்பாக மாநிலங்களுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை. இந்த நிலையில், மாநிலங்கள் தங்கள் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவதில் நியாயமில்லை என்கிறது மாநில அரசு. எனவே, எதிர்க் கட்சிகளின் வலியுறுத்தலுக்கு செவிசாய்க்க தமிழ்நாடு அரசு தயாராக இல்லை என்றே தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.