WHO-ன் ‘குளோபல் ஹெல்த் லீடர்ஸ்’ விருதால் அங்கீகாரம்… யார் இந்த ஆஷா பணியாளர்கள்?

இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்களில் 70 முதல் 80 சதவீத பேர் பெண்கள்தான். உயர் சிறப்பு மருத்துவர்கள் தொடங்கி தூய்மைப் பணியாளர்கள் வரை அனைவரும் பெண்கள்தான். இவர்களில் கடைநிலைப் பணியாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பது இல்லை. மிகவும் குறைவான ஊதியத்தில் அதிக நேரம் பணியாற்றும் இந்தக் கடைநிலைப் பணியாளர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

உலக நிறுவனத்தின் 75-வது மாநாடு ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியாவில் உள்ள 10 லட்சம் ஆஷா பணியாளர்களுக்கு உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குனரின் ‘குளோபல் ஹெல்த் லீடர்ஸ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறப்பானப் பங்களிப்பு, பிராந்திய அளவில் சுகாதார சேவைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவர்களுக்கு இந்த விருதை 2019-ம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் வழங்கி வருகிறது.

யார் இந்த ஆஷா பணியாளர்கள்?

ஆஷா பணியாளர்கள் என்பவர்கள் (Accredited Social Health Activists) கிராமங்களில் மருத்துவ சேவை புரியும் பெண் பணியாளர்கள் ஆவர். 8-ம் வகுப்பு படித்த 25 முதல் 45 வயது வரை உள்ள கிராமபுற பெண்கள் ஆஷா பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்தியாவில் 2005-ம் ஆண்டு தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் (National Rural Health Mission) கீழ் இவர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு கிராமத்திற்கு அல்லது 1000 பேருக்கு ஓர் ஆஷா பணியாளர் என்ற விதிகளை அடிப்படையில் இவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

ஊதியம் எவ்வளவு?

ஆஷா பணியாளர்களுக்கு ரூ.3000 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர்த்து பல்வேறு ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊக்கத் தொகையுடன் சேர்த்து ரூ.6000 ஊதியமாக வழங்கப்படுகிறது. பல மாநிலங்களில் மிகவும் குறைவான ஊதியம் மட்டுமே இவர்களுக்கு வழங்கப்படுகிறது.

10 லட்சம் பணியாளர்கள்

இந்தியாவில் ஊரக பகுதிகளில்தான் அதிக ஆஷா பணியாளர்கள் உள்ளனர். நகர்புறங்களில் குறைந்த ஆஷா பணியாளர்கள்தான் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவில் மொத்தம் 10 லட்சம் ஆஷா பணியாளர்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் அதிபட்சமாக உத்திர பிரதேசத்தில் 1,64,523 பேரும், குறைந்தபட்சமாக மிசோரம் மாநிலத்தில் 1170 பணியாளர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 5,360 ஆஷா பணியாளர்கள் உள்ளனர். ஆஷா பணியாளர்கள் போன்றே தமிழ்நாட்டில் கிராமம் வாரியாக கிராம சுகாதார செவிலியர்கள் தொடக்கம் முதலே பணியாற்றி வருவதால் ஆஷா பணியாளர்கள் குறைவான எண்ணிக்கையில்தான் உள்ளனர்.

என்ன பணி?

கிராம அளவில் வீட்டுக்கு வீடு சுகாதார வசதிகளைக் கொண்டு சேர்ப்பதுதான் இவர்களின் முக்கியப் பணி. குறிப்பாக கருவுற்ற பெண்களை கண்காணிப்பது, குழந்தைப் பேறுக்கு உதவுவது, பிறந்த குழந்தைகளின் உடல்நிலையை கண்காணிப்பது, முறையாக தடுப்பூசி போட அறிவுறுத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துல் என்று சுகாதாரம் தொடர்பான 20 மேற்பட்ட பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கரோனா பெருந்தொற்று

கரோனா தொற்று காலத்தில் கிராம அளிவில் நோய் கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொண்டதில் இவர்களின் பங்கு அளப்பறியது. கரோனா தொற்று கட்டுபபாட்டு பணிகளை மேற்கொள்வது, குழுந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கருவுற்ற பெண்கள் கண்காணிப்பது என ஒரே நேரத்தில் அதிக அளவு பணிகளை மேற்கொண்டனர்.

குறிப்பாக, ஒரு நாளில் அதிக அளவு மக்களை கண்காணிக்கும் பணி இவர்களுக்கு அளிக்கப்பட்டது. இதனால், அதிக நேரம் பணியாற்றும் நிலை உருவானது. இவ்வாறு கரோனா தொற்று காலத்தில் மக்களை காப்பத்தில் மிகப் பெரிய பணியை செய்தனர்.

இவ்வாறு கரோனா காலத்தில் இவர்களின் அளப்பறிய பணிக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக குளோபல் ஹெல்த் லீடர்ஸ் விருதை அளித்து பெருமைப்படுத்தியது. இவர்களுக்கு பிரதமர் மோடி, சுகதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த வாழ்த்துகள் மட்டுமே இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துமா என்பதை சிந்தித்து, இவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பதுதான் ஆஷா பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.