சென்னையில் பூட்டப்பட்ட வீட்டுக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த கணவரின் சடலத்துடன் 2 நாட்கள் வாழ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை புரசைவாக்கம் வைக்கோல்காரன் தெருவில் அசோக் பாபு (53) என்பவர் வசித்து வந்தார். இவரது ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் வெளியூரில் வேலை பார்த்து வர, திருமணமான இவரது மகள் தனது கணவர் குடும்பத்தோடு பெங்களூரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மகள் ஆர்த்தி கடந்த இரு தினங்களாக தனது அப்பாவான அசோக் பாபுவுக்கு போன் செய்து உள்ளார். ஆனால், போன் எடுக்காததால் இன்று வேப்பேரி போலீசாருடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக தாழிட்ட நிலையில் அசோக் பாபு நிர்வாணமாக இறந்து கிடந்தார்.
அருகில் அசோக் பாபுவின் மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி பத்மினி (48) இறந்துபோன அசோக் பாபுவையே பார்த்துக் கொண்டு இருந்தார். மேலும் கதவை உள்பக்கமாக பூட்டிகொண்டு யாரையும் கதவை திறக்கவிடாமல் இருந்தார். இதனையடுத்து வேப்பேரி போலீசார் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர்.
இறந்து கிடந்த அசோக் பாபுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டு இரு தினங்களாக சடலத்துடன் வாழ்ந்து வந்த அசோக் பாபுவின் மனைவி பத்மினியை அரசு மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அழுகிய நிலையில் இறந்த அசோக்பாபுவின் உடலின் மார்புக்கு மேல் இரண்டு கை மற்றும் கழுத்தின் அருகில் தோல் உறிந்த நிலையிலும் முகம் அழுகியும், உடல் உப்பிய நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உடலில் காயம் ஏதும் தெரியவில்லை பிரேத பரிசோதனை செய்த பிறகே தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளனர். குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 174-ன் படி இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/154497.webp.webp.webp)