ம.பி.யில் மோசமான வானிலையால் மின் விநியோகம் துண்டிப்பு!: ரோப் காரில் அந்தரத்தில் தொங்கிய பக்தர்கள்.. திக் திக் காட்சி வெளியீடு..!!

போபால்: மத்தியப்பிரதேசத்தில் மோசமான வானிலையில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் ரோப் காரில் சென்ற பக்தர்கள் அந்தரத்தில் தொங்கிய காட்சி வெளியிடப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் தற்போது பனிப்பொழிவு நிலவி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிபொழிவால் சாலைகள், வீடுகள், பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. பரலாட்சா கடவாய் மற்றும் அதன் அருகில் உள்ள இடங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனி பொழிவு காரணமாக லாஹூல் மற்றும் ஸ்பீதியில் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. இதேபோல் பிரபல சுற்றுலாத் தலமான மணாலியிலும் நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. பனி படர்ந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இரவு நேரங்களில் பெரும்பாலான பகுதிகளில் மைனஸ் டிகிரிக்கும் கீழ் வானிலை பதிவாவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதேபோல் மத்தியப்பிரதேசத்தில் மோசமான வானிலை காரணமாக ரோப் காரில் பயணித்த 80 பக்தர்கள் அந்தரத்தில் தொங்கிய காணொலி வெளியாகியுள்ளது. சட்னா மாவட்டத்தில் மலை உச்சியில் உள்ள மைகாரிஸ் சாரதா தேவி கோயிலுக்கு பக்தர்கள் ரோப் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது லேசான மழையுடன் சூறாவளி காற்று வீசியதால் மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நடுவானில் ரோப் கார் நிறுத்தப்பட்டது. சுமார் 40 நிமிடங்கள் பக்தர்கள் நடுவானில் நின்ற ரோப் காரில் தொங்கி கொண்டிருந்த நிலையில், மின் விநியோகம் சீரானதை அடுத்து ரோப் கார் இயக்கப்பட்டது. அதன்பின் அவர்கள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.