நாட்டை உலுக்கிய விஸ்மயா வழக்கு: குற்றவாளி கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர்
விஸ்மயா
(22). ஆயுர்வேத மருத்துவம் இறுதியாண்டு மாணவியான அவருக்கு மோட்டார் வாகனத் துறையில் ஆய்வாளராகப் பணியில் இருந்த
கிரண்குமார்
என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமானது. இந்தத் திருமணத்துக்காக 100 சவரன் நகையும், ரூ.11 லட்சம் மதிப்புள்ள காரும், நிலமும், பணமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.

ஆனால், கூடுதலாக வரதட்சணை கேட்டு விஸ்மயாவை அவரது கணவர் கிரண்குமார் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அத்துடன் அவரை கடுமையாக தாக்கியும் உள்ளார். இதனால், இரு வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்பட்டு, ஒருகட்டத்தில் இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்று சமாதானம் ஆகியிருக்கிறது. அதன்பிறகு, விஸ்மயாவை பிறந்த வீட்டுக்கு கிரண் குமார் அனுப்பவில்லை. தொலைபேசியில் அவரது அம்மாவுடன் மட்டும் பேச அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதி விஸ்வமயாவின் சடலம் குளியலறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டம் சாஸ்தான்கோட்டையில் தன் கணவரின் வீட்டு குளியலறையில் தொங்கிய நிலையில் நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டது. 22 வயது பெண் வரதட்சணை கொடுமையால் மரணமான சம்பவம் கேரளம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வாட்ஸ்-அப் செய்திகள், செல்போன் அழைப்புப் பதிவுகள் அடிப்படையில் விஸ்மயாவின் கணவர் கிரண்குமார் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீன் வெளிவந்தார். தற்கொலை செய்து கொண்டதாக கிரண்குமார் தரப்பில் சொல்லப்பட்டாலும், அது மர்மமான மரணமாக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. கேரள அரசு கிரண்குமாரை பணி நீக்கமும் செய்தது.

இந்த வழக்கு கொல்லம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த வாரம் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. அதனடிப்படையில், நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், இந்தியத் தண்டனைச் சட்டம் 304-பி பிரிவின் கீழ் கிரண்குமாரை குற்றவாளி என தீர்ப்பளித்தது. அவரது ஜாமீனையும் நீதிமன்றம் ரத்து செய்தது. தன் தந்தையிடம் அழுது கொண்டே விஸ்வமயா பேசிய ஆடியோவை சாட்சியாக வைத்து கணவர் கிரண்குமாரை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கான தண்டனை விவரங்கள் மே 24ஆம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் என தெரிவித்தது.

அதன்படி, குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.12.5 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில். ரூ.2 லட்சத்தை பாதிக்கபட்ட விஸ்மயா குடும்பத்திற்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.