காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிறிஸ்டி கல்லூரியில், `இந்தியா 75′ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியின் கலந்துரையாடலில், இந்திய மாணவர்களின் கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலுரையாற்றினார். அப்போது மாணவர் தரப்பிலிருந்து, இந்து தேசியவாத சக்திகளுக்கு எதிராக எவ்வாறு போராடத் திட்டமிட்டுள்ளது என கேள்வியெழுந்தது. அதற்குப் பதிலளித்த ராகுல்காந்தி, “இதில் இந்து என்று எதுவுமில்லை, உண்மையில் தேசியவாதம் என்றும் இதில் எதுவுமில்லை. நீங்கள் அவர்களுக்கு ஏதாவது புதிய பெயரைச் சொல்ல வேண்டும் என் நினைக்கிறேன்.
ஆனால் நிச்சயமாக அவர்கள் இந்துக்கள் இல்லை. அதுமட்டுமல்லாமல், மக்களை அடிப்பதிலும், கொல்வதிலும் இந்துத்துவம் ஏதும் இல்லை என்று சொல்லுமளவுக்கு, இந்து மதத்தை நான் படித்துள்ளேன். ஆனால், ஆர்.எஸ்.எஸ், பிரதமர் ஆகியோருடன் என்னுடைய பிரச்னை என்னவென்றால், அவர்கள் இந்தியாவின் அடித்தளக் கட்டமைப்பை ஆட்டிப் படைக்கின்றனர். பிரதமர் செய்த நல்ல விஷயங்களும் இருக்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இருப்பினும் இந்தியா என்ற கருத்தைத் தாக்குவதென்பது என்னைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்” என்று கூறினார்.