“கந்துவட்டி கொடுமை தாங்க முடியவில்லை” – வீடியோ பதிவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

சென்னையில் கந்துவட்டி கொடுமை காரணமாக வீடியோ பதிவிட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கொளத்தூர் மக்காராம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கந்தன் (28). டிரைவரான இவர் இன்று காலை வீட்டின் அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த ராஜமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று உயிரிழந்த கந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கந்தனின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் தற்போது விசாரணை நடத்திவருகின்றனர்.
image
இறப்பதற்கு முன்னதாக கந்தன் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ராஜமங்கலத்தில் உள்ள திருப்பதி பைனான்ஸ் என்ற நிறுவனத்தில் அவர் 1 லட்சம் ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கியதாகவும், சரிவர வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்தி வந்ததாகவும், ஆனால் சமீபத்தில் வேலைக்கு செல்லாததால் வட்டியை சரிவர செலுத்த முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து திருப்பதி பைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வேலு அடிக்கடி தொலைபேசியில் அழைத்து பணம் கேட்டு தொல்லை கொடுத்து மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அவரது செல்போனை சைபர் ஆய்வகத்திற்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
image
இதனையடுத்து மன உளைச்சல் காரணமாக தனது மகன் தற்கொலை செய்துகொண்டதாகவும், அதற்கு காரணமான திருப்பதி பைனான்ஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கந்தனின் தந்தை ஜெய்சங்கர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
image
இது தொடர்பாக ராஜமங்கலம் போலீசார் விசாரணையை மேற்கொண்டதில், ஒரு லட்சம் ரூபாய் பணத்திற்கு 15 சதவீத வட்டி என்ற அடிப்படையில் வாரம் பணம் செலுத்த வேண்டும் என்ற கணக்கில் கந்தன் கடன் வாங்கியது தெரியவந்துள்ளது. 70 ஆயிரம் வரை கடனை வட்டியுடன் செலுத்தியுள்ளதாகவும், 30 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ராஜமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
image
ஏற்கெனவே கடந்த மே மாதம் 1-ஆம் தேதி புளியந்தோப்பு பகுதியில் சித்ரா என்பவர் 7 லட்ச ரூபாய் கடன்பெற்று 20 லட்சம் ரூபாயை வட்டியுடன் செலுத்த வேண்டும் என மிரட்டிய விவகாரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதும் குறிப்பிடத்தக்கது. கந்து வட்டியால் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அடுத்தடுத்து அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் தலைதூக்கும் கந்துவட்டி கொடுமையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தற்கொலை செய்துகொண்ட கந்தனின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.