சென்னையில் 4 கட்சிகளின் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்- திரளாக பங்கேற்க திருமாவளவன் அழைப்பு

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மோடி அரசைக் கண்டித்து சி.பி.ஐ. (எம்) சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்எல்-லிபரேசன்) ஆகிய கட்சிகளோடு விடுதலை சிறுத்தைகள் ஒருங்கிணைந்து இன்று முதல் 31ந் தேதி வரையிலான விழிப்புணர்வு பரப்பியக்கம் மேற் கொள்வது மற்றும் 26 மற்றும் 27-ந் தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு பொருட்கள் மீது அநியாயமாக விதிக்கப்பட்ட செஸ், சர்-சார்ஜ் என்ற கூடுதல் வரிகளைக் கைவிட வேண்டும், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் நியாய விலைக் கடைகளில் வழங்க வேண்டும்.

வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்கள் அனைத்துக்கும் மாதம் ரூ.7500 நிதி உதவி வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பதிவு செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் 100 நாட்களுக்கு வேலை தர வேண்டும்.

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்பிட வேண்டும், நகர்ப்புற வேலை உறுதி சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் முதலான கோரிக்கைகளை முன்வைத்து மே 26 , 27 ஆகிய தேதிகளில் தமிழகமெங்கும் ஒன்றிய, நகர, வட்டார தலைமையிடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.

நான்கு கட்சிகளின் தலைவர்களும் மே 27-ந் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், மேற்கண்ட கண்டன இயக்கத்தில் இடது சாரிகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்று இதனை வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான இந்த கண்டன இயக்கத்துக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து ஜனநாயக சக்திகளையும் பங்கேற்க அழைக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.