அம்பேத்கர் பெயர் சூட்டியதால் ஆத்திரம் – கலவர பூமியான ஆந்திரா!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கோனசீமா மாவட்டத்தின் பெயரை, பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா என, பெயர் மாற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களை, 26 மாவட்டங்களாக பிரித்து, தெலுங்கு வருடப் பிறப்பை ஒட்டி அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, புதிய 13 மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அந்த வகையில், புதிதாக உருவாக்கப்பட்ட கோனசீமா மாவட்டத்தின் பெயரை, பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமான என பெயர் மாற்றம் செய்ய, முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பும் தெரிவித்து இருந்தன.

இதற்கிடையே, கோனசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என பெயர் மாற்றி, ஆந்திர மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோனசீமா பரிக்ரக்ஷன சமிதி, கோனசீமா சாதனா சமிதி ஆகிய அமைப்புகள் தீவிர போராட்டம் நடத்தி வந்தன.

இந்நிலையில், அமலாபுரத்தில் உள்ள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வரூப் வீட்டின் முன்பு நேற்று ஏராளமானோர் திரண்டு கல் வீசி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திடீரென அமைச்சரின் வீடு தீப்பற்றி எரிந்தது. இதற்கு அங்கிருந்த காஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால் போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக ஆளுங்கட்சி சார்பில் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி போர்க்களம் போல காணப்பட்டது. ஒரு கல்லுாரி பேருந்து, ஒரு அரசுப் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து வன்முறை நடந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த வன்முறையில், 10-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 46 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.