சென்னை: சென்னை வந்த பிரதமர் மோடிக்கு சிலப்பதிகாரம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை வழங்கி வரவேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை – பெங்களூரு இடையே ஆந்திரா வழியாக ரூ.14,870 கோடி மதிப்பில் 262 கி.மீ. விரைவுச்சாலை, சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே 21 கி.மீட்டருக்கு ரூ.5,850 கோடியில் இரண்டு அடுக்கு 4 வழி உயர்மட்ட சாலை, நெரலூரு- தருமபுரி இடையே ரூ.3,870 கோடியில் 4 வழிச்சாலை, ரூ.720 கோடியில் மீன்சுருட்டி – சிதம்பரம் நான்கு வழிச்சாலை ஆகிய சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவும், ரூ.2,900 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 5 திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையார் விமான படைத் தளம் வந்த அவரை, அங்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அப்போது, பிரதமர் மோடிக்கு சிலப்பதிகாரம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து சாலை வழியாக நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு பிரதமர் மோடி வந்தார். மோடி வரும் சாலையில் முழுவதும் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைப் பார்த்த பிரதமர் மோடி காரின் கதவை திறந்து பொதுமக்களை நோக்கை கையசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.