தமிழகத்தில் 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ என்ற பாரதியார் பாடலை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, ‘வணக்கம்’ என தமிழில் உரையை தொடங்கினார்.
தமிழக மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் அத்தனையும் சிறப்பு வாய்ந்தது என்று பிரதமர் மோடி தமிழுக்கு புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இது மிகவும் சிறப்பான பூமி. இந்த மாநிலத்தின் மக்கள், கலாசாரம், மொழி சிறப்பானவை. ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டிலிருந்து வரும் எவரேனும் ஒருவர் எப்போதுமே தலைசிறந்தவராக செயல்படுகிறார்.
சமீபத்தில் இந்திய காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் குழுவிடம் பேசினேன். இந்த முறை ஒலிம்பிக்கில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. இதில் இந்தியா வென்ற 16 பதக்கங்களில், 6 பதக்கங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் பங்களிப்பு உள்ளது.
தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாசாரம் உலகளாவியது. சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென் ஆப்பிரிக்கா வரை பொங்கல், புத்தாண்டு மிகச் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.