மகாராஷ்டிர மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி பிரிவு) வழங்கப்படும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக அம்மாநில அரசு தற்போது சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது.
இந்தநிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத் பவார் பேசுகையில்,
“எதையும் இலவசமாக கேட்கவில்லை. நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு நியாயமாக சேர வேண்டியதை சரியாக பெற வேண்டும். மக்களின் உரிமையை பெறுவதற்கு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தவிர வேறு வழியில்லை.
அரசியலமைப்பு சட்டம் வழங்கிய இட ஒதுக்கீட்டின் காரணமாக பட்டியல் இன வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பலனடைந்துள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இதே போன்ற சலுகைகள் தேவைப்படுகிறது.
இதற்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகையை துள்ளியமாக அறிந்து கொள்ள வேண்டும். இந்த கணக்கெடுப்பின் புள்ளி விவர அடிப்படையில் தான் சமூக நீதி கிடைக்கப் பெறும். எனவே அரசு சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பாஜக கூட்டணியில் உள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். ஆனால், அம்மாநிலத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் பையாஜி ஜோஷி சாதி அடிப்படையிலான இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை கடுமையாக எதிர்த்து வருகிறார்” என்று சரத் பவார் பேசினார்.