’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்

பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் அரசியல் நாடகம் நடத்தியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து இன்று தமிழகம் வருகை புரிந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மேடையில் இருக்கும் போதே பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தி பேசினார். முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு அரங்கத்திலும் நல்ல வரவேற்பு இருந்தது. முதல்வர் ஸ்டாலின் பேச்சு குறித்த விவாதங்களும் தொடங்கிவிட்டது.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் பிரதமர் மோடியை டெல்லிக்கு வழியனுப்ப சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பல முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல், பல திட்டங்கள் அர்ப்பணிப்பு இன்று செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்ட தமிழகத்தை உருவாக்குவதற்காக பிரதமர் மோடி வந்துள்ளார்.
ஒரு மாநில முதல்வர் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு சான்று, இன்று தமிழக முதல்வர் நடந்து கொண்ட விதம். பிரதமரை மேடையில் அமரவைத்துவிட்டு முதல்வர் பேசிய பேச்சு அரசியல் நாடகத்தை நடத்தியதை காட்டியுள்ளது. கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு என்ன தைரியத்தில் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைக்கிறார். கச்சத்தீவை மீட்டுத்தர கோரிக்கை வைக்கும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு கிடையாது.
அரசியல் நாடகத்தை மு.க.ஸ்டாலின் நடத்தியுள்ளார். எப்படி ஜிஎஸ்டி கவுன்சில் நடக்கிறது என்பது கூட தெரியாமல், முதல்வர் பேசியது தமிழகத்தை அவமானப்படுத்துவது போலாகிறது. தமிழகம் மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டிய பணம், 25 ஆயிரம் கோடி. இதனை நிதியமைச்சரை மறுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். இதனை மேடையில் முதலமைச்சர் சொல்லியிருக்கலாமே.
தமிழகத்தையும் இந்தியாவையும் பிரதமர் தரம் பிரித்து பார்த்ததில்லை. முதலமைச்சர் பேசியது அனைத்துமே பொய். முன்னுக்கு பின் முரணான தகவலை பேசிவிட்டு திராவிட மாடல் என்கிறார். ஆளுங்கட்சி காசு கொடுத்து ஆட்களை கூப்பிட்டு வந்துள்ளனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.