ஜம்முவில் பிரபல டிவி நடிகை சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் வெறியாட்டம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பிரபல டிவி நடிகையை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளில், தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமதுவை சேர்ந்த தீவிரவாதிகள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். நேற்றும் கூட, குப்வாரா மாவட்டத்தில் 3 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே ஜம்மு காஷ்மீரில் வெளிநாடுகளை சேர்ந்த 26 தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் கொன்றுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள விரக்தியால், பொதுமக்கள், போலீசார், அரசு ஊழியர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று, பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களில் மட்டுமே அவர்கள் 2 போலீசாரையும், தாசில்தார் அலுவலக ஊழியரையும் அவர்கள் கொன்றுள்ளனர். இந்நிலையில், பத்காம் மாவட்டத்தில் உள்ள சதுரா என்ற பகுதியில் வசித்து வந்த பிரபல டிவி நடிகையான அமரீன் பட்டை நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் நுழைந்து 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். படப்பிடிப்பு இருப்பதாக கூறி அவரை வீட்டில் இருந்து வெளியே அழைத்த தீவிரவாதிகள், திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் அம்ரீனும், அவருடைய உறவுக்காரரான 10 வயது சிறுவனும் படுகாயமடைந்தனர். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அம்ரீன் இறந்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.