"பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துங்கள்…" முன்னனி நடிகர்களுக்கு கடிதம் எழுதிய மாணவி

போபால்,

பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக முன்னனி இந்தி நடிகர்கள் மீது சமீப காலமாக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தான் பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர் அக்‌ஷய் குமார் தனது வருத்தத்தையும் பதிவு செய்திருந்தார். இருப்பினும் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஷாரூக் கான் மீது தொடர்ந்து இம்மாதிரியான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மத்திய பிரதேசம் கர்காவ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது தட்கன் என்ற மாணவி, இந்தி நடிகர்கள் ஷாரூக் கான், அஜய் தேவ்கன் இருவருக்கும் ரூ.5 மணி ஆர்டருடன் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதோடு 5 ரூபாய்க்கான மணி ஆர்டரையும் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-

“உங்கள் கையிலிருந்து ஒரு பான் மசாலா பாக்கெட்டை எடுக்க வேண்டும் என்பதற்காவே நான் உங்களுக்கு 5 ரூபாய் மணி ஆர்டரை செய்துள்ளேன். நீங்கள் இருவரும் எனக்கு பிடித்த நடிகர்கள். ஆனால் நீங்கள் பான் மசாலாவை விளம்பரம் செய்கிறீர்கள் என்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.

இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் ஏற்கெனவே ட்வீட் செய்தேன். ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லை. இதனால் சகோதர-சகோதரிகளுக்கான சிறப்பு நாளில் இந்த கடிதத்தை உங்கள் இருவருக்கும் எழுதுகிறேன்.

எனக்கு சகோதர, சகோதரிகள் கிடையாது. நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை. பெண் பிள்ளைகள் ஒரு சுமை இல்லை, அவர்கள் 10 ஆண் பிள்ளைகளுக்கு சமமானவர்கள் என்பதை நிரூபிக்க நான் எப்போதும் முயற்சி செய்துள்ளேன்.

பான் மசாலாக்கள் ஏராளமான நோய்களை உண்டாக்குகின்றன. உங்களை இளைஞர்கள் பின்பற்றுகிறார்கள். நான் உங்கள் இருவரை எனது பெரிய அண்ணன்களாக பார்க்கிறேன். அதனால்தான் உங்களை பான் மசாலாக்களை விளம்பரப்படுத்துவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த கடிதத்தில் தட்கன் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.