காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரின் செல்வாக்கைப் பயன்படுத்தி, அவரின் மகனான கார்த்தி சிதம்பரம் சீன நாட்டினர் 263 பேருக்குச் சட்டவிரோதமாக விசா பெற்றுக் கொடுக்க ரூ. 50 லட்சம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதுடன், இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் என்பவரை டெல்லி சிபிஐ கைது செய்து விசாரித்து வருகிறது. மேலும், முதல் குற்றவாளி பாஸ்கரராமன், இரண்டாவது குற்றவாளி கார்த்தி சிதம்பரம் என டெல்லி சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து சென்னை, டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் 18 இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இந்த நிலையில் நேற்று சிபிஐ தலைமை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் ஏறத்தாழ 10 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “நான் எந்த சீனருக்கும் விசா வழங்க உதவவில்லை. என் மீது சிபிஐ பொய் வழக்குப் போட்டு தனது குரலை ஒடுக்க முயல்கிறது. சிபிஐ-யின் செயல் எனது நாடாளுமன்ற நடவடிக்கைகளில் நேரடியாகத் தலையிடுவதாக உள்ளது. நாடாளுமன்றத்தில் எனது செயல்பாடுகளைத் தடுக்க சிபிஐ நினைப்பது ஜனநாயகம் மாண்புகள் மீதான தாக்குதல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்தை மே 30-ஆம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.