ராமேசுவரம் மீனவப் பெண் கூட்டுப் பாலியல் கொலை வழக்கு: வட மாநில இளைஞர்கள் 2 பேர் கைது

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் மீனவப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் 2 வட மாநில இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமேசுவரத்தில் செவ்வாய்கிழமை இரவு வடகாடு கடற்கரை பகுதியில் பாசி சேகரிக்கும் 45 வயது மீனவப் பெண் ஒருவரின் உடல், எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த வடகாடு பகுதி மீனவர்கள் அருகில் இருந்த இறால் பண்ணைக்குள் நுழைந்து தீ வைத்ததுடன் பொருட்களை அடித்து, உடைத்து சேதப்படுத்தினர். மேலும், அங்கிருந்த வட மாநில இளைஞர்கள் 6 மீதும் தாக்குதல் நடத்தினர்.

மறுநாள் புதன்கிழமை ராமேசுவரத்தில் உயிரிழந்த மீனவப் பெண்ணின் உறவினர்கள், கிராம மக்கள் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மீனவப் பெண்ணுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு டயர்களை எரித்ததால் வாகனப் போக்குவரத்து ஐந்தரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

ராமேசுவரத்தில் மதுரை நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் டயர்களை கொழுத்திய போராட்டக்காரர்கள்.

விசாரணை: கொலை செய்யப்பட்டவரின் கணவர் ராமேசுவரம் காவல்நிலையத்தில், தனது மனைவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அளித்த புகாரின் அடிப்படையில், மீனவர்களின் தாக்குதலால் காயமடைந்து மதுரையில் சிகிச்சை பெற்று வந்த வடகாடு இறால் பண்ணையில் பணியாற்றிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் ரானா (34), ராகேஷ் (25), விகாஸ் (24), பிரகாஷ் (22), பிரசாத் (18), பின்டு (18) ஆகிய இளைஞர்களை மண்டபம் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

வட மாநில இளைஞர்கள் இருவர் கைது: போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் ரானா மற்றும் பிரகாஷ் ஆகிய இருவர் மீனவப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும், அவர் அணிந்திருந்த தங்க ஆபரணம் மற்றும் வெள்ளி பொருளை கொள்ளையடித்து அதனை ராமேசுவரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் விற்பனை செய்ய முயன்றது, ஒடிசாவுக்கு தப்பி ஓடுவதற்காக ரயிலில் செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்ததும் தெரிய வந்தது.

மேலும், பிரேதப் பரிசோதனையில் மீனவ பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ரஞ்சன் ரானா மற்றும் பிரகாஷ் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ராமேசுவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்கள்.

4 வட மாநில இளைஞர்களுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பதால், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 பேர் மீது வழக்கு பதிவு: இதனிடையே, ராமேசுவரம் வி.ஏ.ஓ ரோட்ரிகோ அளித்த புகரின் அடிப்படையில் மீனவப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை கண்டித்து ராமேசுவரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேர் மீதும் ராமேசுவரம் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.