கொல்கத்தா: மேற்குவங்க பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் மம்தா பானர்ஜியை நியமிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கருக்கும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. அந்த வகையில் பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.
தற்போதைய நடைமுறைகளின்படி மேற்குவங்க ஆளுநர், அந்த மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ளார்.
இதை மாற்றி மாநில முதல்வரே பல்கலைக்கழங்களின் வேந்தராக பதவி வகிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன்படி மேற்குவங்க சட்டப்பரவையில் விரைவில் சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்று ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.