எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் வாகனங்களைக் கண்காணித்து,அதுதொடர்பான தரவுகள் மற்றும் தகவல்களை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் உடனடியாக பரிமாறிக் கொள்ளக்கூடிய செயலி (App) தற்போது நாட்டில் பல இடங்களில் பரிசோதிக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தகவல் தொழிநுட்பப் பிரிவினால் இந்த செயலி (App) உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள வரும் வாடிக்கையாளர்களின் வாகனத்தின் இலக்கத்தகடு குறித்த விபரமும் செயலியில் (App) உள்ளடக்கப்படும்.உள்ளடக்கப்பட்ட தரவுகள் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள செயலியினூடாக உடனடியாக தகவல்களை பரிமாறிக் கொள்ளும்.
அத்துடன், வாகனத்தின் இலக்கத்தகடு செயலியில் உள்ளடக்கப்பட்டதன் ஊடாக, அந்த வாகனம் குறித்த தினத்தில் வேறு இடத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டதா என்பதையும், வாகனத்திற்கு எரிபொருள் கிடைத்ததா என்பது பற்றிய தகவல்களையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் அறிந்துகொள்ள முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த செயலியை (app) தயாரித்தமைக்காக பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கும் அமைச்சர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.