தஞ்சையில் நகைக் கடை ஒன்றில் நுழைந்த பர்தா அணிந்திருந்த அடையாளம் தெரியாத 2 பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து, தங்கச் செயினை திருடிவிட்டு, அதற்கு பதிலாக கவரிங் செயினை மாற்றி வைத்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.
தஞ்சாவூர் தென்கீழ் அலங்கத்தில் உள்ள நகை கடை ஒன்றில் மே 25-ம் தேதி பர்தா அணிந்து வந்த இரண்டு பெண்கள், நகை வாங்குவது போல் ஊழியர்களிடம் பேசியுள்ளனர்.
அப்போது செயின் வேண்டும் என அப்பெண்கள் கூற, கடை ஊழியர் ஐந்து செயின்களை காட்டியுள்ளார். அப்போது அப் பெண்கள் கடை ஊழியரை திசை திருப்பி தங்கச் செயினை திருடிக் கொண்டு, அதற்கு பதிலாக கவரிங் செயினை மாற்றி வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
கடை ஊழியரும் செயின்களின் எண்ணிக்கை சரியாக இருந்ததால் அவர்களை சந்தேகப்படவில்லை.
பிறகு,பெண்கள் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பின்னர் மீண்டும் செயின்களை சரிபார்த்த போதுதான் தங்கச் சங்கிலி திருடப்பட்டு அதற்கு பதிலாக கவரிங் செயின் இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த நகைக்கடை ஊழியர்கள் வெளியே ஓடிவந்து தேடிய போது அந்த பெண்கள் இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர்.
இது குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“