மதுரை: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், பழமை மாறால் ரூ.2.12 கோடியில் புதுப்பொலிவுப்படுத்தப்படும் வகையில் புனரமைக்க ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தமான மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் 6 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அனை தொடர்ந்து 300 ஆண்டுகள் பழமையான ராணி மங்கம்மாள் அரண்மனையில் அமைந்துள்ள அருங்காட்சியகம் பழமை மாறாமல் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
காந்தி அருங்காட்சியக வளாகத்தில் கழிவறை, லிப்ட், பளிங்கு கற்கள், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ. 3 கோடி நிதி விடுவிக்கபட்டது. அதனடிப்படையில், மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை பொறியாளர் தலைமையிலான குழுவினர் காந்தி நினைவு அருங்காட்சியகத்தை புணரமைக்க கடந்த மாதம் திட்ட வரைவு அறிக்கை தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தினர்.
இந்நிலையில் தற்போது ரூ. 2 கோடியே 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 12 மாதங்களுக்குள் புனரமைக்க ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கபட்டுள்ளது. இதில் வருகின்ற மே 30ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரை விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.