தமிழகத்தில், கோடையின் முக்கிய வெயில் காலமான அக்னி நட்சத்திரம் கடந்த 4-ம் தேதி துவங்கியது. அப்போது, சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மிதமான வெப்பநிலை பதிவானது. அதேநேரம், மத்திய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வெயில் தீவிரம் காட்டியது.
அதன்பிறகு தென்மேற்கு பருவமழை காலம் அந்தமானில் தொடங்கியதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது. அதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியது.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் நேற்று (மே 26) அதிகபட்சமாக கரூர் பரமத்தி, கடலூர் ஆகிய இடங்களில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
மேலும், சென்னை மீனம்பாக்கம் வேலூரில் 102 டிகிரியும், திருச்சியில் 101 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம், பரங்கிப்பேட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அதேபோல், புதுச்சேரியிலும் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி துவங்கிய அக்னி நட்சத்திர வெயில் காலம் நாளையுடன் (28-ம் தேதி) முடிவடைகிறது. இதனால், வெயிலின் அளவு குறையும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.