கேரள அரசின் பம்பர் லாட்டரியில் 10 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி யார்?: 6 நாட்கள் ஆகியும் தெரியவில்லை

திருவனந்தபுரம்: கேரள அரசின் விஷு பம்பர் லாட்டரி  டிக்கெட் கடந்த மாதம் விற்பனைக்கு வந்தது. முதல் பரிசு ₹10 கோடி என்பதால்  டிக்கெட் வெளியான உடனேயே பரபரப்பாக விற்பனையானது. மொத்தம் 43.86 லட்சம்  டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டன. இதில், 43,69,202 டிக்ெகட்டுகள்  விற்பனையானது. இதன் மூலம், கேரள அரசுக்கு ₹93 கோடிக்கு மேல் வருமானம்  கிடைத்தது. இந்நிலையில், லாட்டரி குலுக்கல்  கடந்த 22ம் தேதி   திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில், முதல் பரிசான ₹10 கோடி HB 727990 என்ற  எண்ணுள்ள டிக்கெட்டுக்கு விழுந்தது. இந்த டிக்கெட் திருவனந்தபுரம் கிழக்கே  கோட்டையில் உள்ள ஒரு லாட்டரி ஏஜென்சியில் விற்பனையானது. இங்கிருந்து  திருவனந்தபுரம் வள்ளக்கடவு பகுதியை சேர்ந்த ரங்கன் என்ற லாட்டரி  விற்பனையாளர் வாங்கியுள்ளார்.இவரும், இவரது மனைவியும்  திருவனந்தபுரம்  விமான நிலையம் அருகே லாட்டரி விற்பனை செய்து வருகின்றனர்.  குலுக்கல் நடந்து இன்றுடன் 6 நாட்கள் ஆன பிறகும், இந்த டிக்கெட்டை வாங்கிய அந்த கோடீஸ்வர  அதிர்ஷ்டசாலி யார் என தெரியாமல் உள்ளது. விமான நிலையத்தின் அருகே லாட்டரி  விற்பனை நடந்துள்ளதால் வெளியூருக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ செல்லும்  வழியில் யாராவது  வாங்கி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.