கஞ்சா விற்ற 10 வாலிபர்கள் கைது: புதுவை போலீசார் அதிரடி| Dinamalar

அரியாங்குப்பம்: புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 10 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பாக்கெட்டுகள், மோட்டார் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே உள்ள தேடுவார்நத்தம் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்கப்படுவதாகபோலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு, ஏட்டு வசந்த் ஹரிஷ் மற்றும் போலீசார் நத்தம் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் போலீசாரிடம் சிக்கியது.

விசாரணையில் அவர்கள், தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்த கூனி என்ற குமரகுரு, 19; தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையத்தை சேர்ந்த பிளேடு விஷ்ணு என்ற விஷ்ணு, 20; சிங்கிரிகுடியை சேர்ந்தசந்தோஷ், 19; பாகூரை அடுத்த மணமேட்டை சேர்ந்த அருண் என்ற அருண்குமார், 20; கடலுார் அடுத்த பில்லாலிதொட்டியை சேர்ந்த சூர்யா, 23, என்பது தெரிய வந்தது.
கஞ்சா கும்பலின் தலைவனாக கூனி என்ற குமரகுரு செயல்பட்டதும், சென்னை, திருவண்ணாமலை ஆகிய பகுதியில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து பாக்கெட்டில் அடைத்து, மற்றவர்கள் மூலமாக விற்று பணத்தை பெற்று வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து, குமரகுரு உட்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்மதிப்புள்ள ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மோட்டார் பைக்கை கைப்பற்றினர். பின், கைது செய்யப்பட்ட 5 பேரையும், புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

திருக்கனுார்
திருக்கனுார் அடுத்த காட்டேரிக்குப்பம் ஏரிக்கரை பகுதியில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக காட்டேரிக்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. மேற்கு பகுதி எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின் பேரில், திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார், அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஏரிக்கரை பகுதியில் சந்தேகம்படும்படி நின்றிருந்த 3 பேர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், வழுதாவூர் ஒத்தவாடை தெருவை சேர்ந்த சதீஷ், 18; வழுதாவூர் மருத்துவமனை வீதியை சேர்ந்த ஆகாஷ், 24; வழுதாவூர் நுாலக வீதியை சேர்ந்த அஜய், 18; என்பது தெரிய வந்தது. அவர்களிடம் சோதனை நடத்தியதில், 250 கிராம் கொண்ட 35 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள், ரூ.500, மோட்டார் பைக் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி நகரம்

பெரியக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் ஆம்பூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 பேரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்கள் மணக்குள விநாயகர் கோவில் பிளாட்பாரத்தில் வசிக்கும் குரு,19; மங்கையர்கரசன் என்ற வேலு, 21; என்பதும், கஞ்சாபொட்டலங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், 2 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.