ஆசிய கோப்பை ஹாக்கி: ஜப்பான், இந்தியா இன்று பலப்பரீட்சை

ஜகார்த்தா:
11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. 
8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் இந்தியா, ‘பி’ பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர் 4 எனப்படும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 
இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் பிரேந்திர லாக்ரா தலைமையிலான இந்திய அணி ஜப்பானை இன்று எதிர்கொள்கிறது. ஏற்கனவே லீக் சுற்றில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த இந்திய அணி இன்று வெற்றிபெற்று பழிதீர்க்குமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை 12 வீரர்கள் புதுமுகங்கள். இளம் வீரர்களை கொண்ட இந்தியா கடைசி லீக்கில் இந்தோனேசியாவை 16-0 என்ற கோல் கணக்கில் புரட்டி எடுத்தது. இருப்பினும் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் இந்திய வீரர்கள் தடுமாறுகிறார்கள். இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். 
லீக் சுற்றில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்த ஜப்பான் வீரர்கள் அதே உத்வேகத்துடன் தாக்குதல் ஆட்டத்தை தொடுப்பதில் தீவிரம் காட்டுவதால் இந்திய வீரர்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.