புதுடில்லி : ‘போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகனுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை’ என, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையிலிருந்து கோவாவுக்கு, கடந்தாண்டு அக்டோபரில் சென்ற சொகுசு கப்பலில், போதை விருந்து நடப்பதாக தகவல் கிடைத்தது.
போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அந்த கப்பலில் அதிரடிச் சோதனை நடத்தினர். இதில், நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின், அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இந்த வழக்கு தொடர்பாக, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில், 14 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
ஆனால், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களில், ஆர்யன் கான் உட்பட ஆறு பேரின் பெயர்கள், இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. இவர்கள், போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக, போதிய ஆதாரம் கிடைக்கவில்லை என, குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கிலிருந்து ஆர்யன் கான் உட்பட ஆறு பேர் விடுவிக்கப்பட உள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே மீது, தரமற்ற விசாரணை நடத்தியற்காக நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisement