சசிகலா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததால், மீண்டும் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதிமுகவின் அதிருப்தி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இதனிடையே சசிகலா ஆன்மீகம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே சசிகலா அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்குவேன் என்றும், அதிமுகவுக்கு தான் தலைமை தாங்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதாகவும் கூறினார். மேலும் அதிமுக தலைவர்கள் தற்போது தன்னுடைய நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், சிலர் மட்டும் தன்னை எதிர்க்கிறார்கள் என சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா கடந்த வாரம் அளித்த பேட்டியில், அதிமுகவுக்கு நான் நிச்சயம் தலைமை தாங்குவேன். அதற்கான நம்பிக்கை 100 சதவீதம் உள்ளது எனக் கூறினார்.
இந்நிலையில், சசிகலாவை பாஜக முன்னாள் எம்பி விஜயசாந்தி சமீபத்தில் இரகசியமாக சந்தித்துள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த நேரத்தில் தி நகரில் உள்ள இல்லத்தில் வெளிப்படையாக சந்தித்த விஜயசாந்தி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இரகசியமாக சசிகலாவை சந்தித்துள்ளார்.
சந்திப்பின்போது சசிகலாவின் வருங்கால அரசியல் பயணம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, அதிமுகவிலிருந்து விலகி இருப்பவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகவே விஜயசாந்தி சசிகலாவை சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.