காதலனுடன் ஓடிய மகள் கழுத்து அறுத்து கொலை- பெற்றோர் வெறிச்செயல்

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் நார்நுர் மண்டலம், நாகலூ குண்டா பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி சாவித்திரிபாய். தம்பதிக்கு 2 மகள்கள் மகன் உள்ளனர்.

தேவதாசின் இளைய மகள்‌ ராஜேஸ்வரி (வயது 20). அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார்.

ராஜேஸ்வரியின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. வேறு மதத்தைச் சேர்ந்த வாலிபரை காதலிப்பதற்கு ராஜேஸ்வரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரி திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனார். அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

அப்போது ராஜேஸ்வரி காதலருடன் சென்றது தெரியவந்தது.

இதனால் அவமானம் அடைந்த ராஜேஸ்வரியின் பெற்றோர் நார்நுர் போலீசில் புகார் செய்தனார். இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் காணாமல் போன ராஜேஸ்வரி மற்றும் அவரது காதலனை கண்டுபிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து ராஜேஸ்வரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ராஜேஸ்வரியை அழைத்து சென்ற அவரது காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராஜேஸ்வரியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். நேற்று அதிகாலை ராஜேஸ்வரியின் பெற்றோர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.

தனது மகள் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக ஊர் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜேஸ்வரியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நார்நுர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் ராஜேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேவதாஸ் சாவித்திரி பாய் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.