முக்கிய விவகாரத்தை கையில் எடுத்து, களமிறங்கி அடிக்கும் பாஜக.! திமுக அரசு மீது பகிரங்க குற்றச்சாட்டு.! 

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை திட்டமிட்டு திமுக அரசு புறக்கணிப்பதாக, பாஜகவின் விவசாய அணி மாநில தலைவர் G.K.நாகராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று வெளியான அறிக்கையில், “விவசாயிகளின் 60  ஆண்டுகால போராட்டத்திற்குப்பிறகு முன்னாள் முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்ற பொழுது ரூ.1,756.88 கோடி செலவில் திட்டத்திற்கு 28.02.2019-ல் அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கினார்.

பவானி ஆறு காவிரியாற்றில் கலக்கும் காலிங்கராயன் அணைகட்டு பகுதியிலிருந்து குழாய் மூலமாக நீரைக் கொண்டுவந்து, மோட்டார் பம்புகள் உதவியுடன் நீரேற்று நிலையங்கள் அமைத்து ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களிலுள்ள  1045 சிறிய,பெரிய குளம்,குட்டைகளில் 1.5 TMC  நீரை நிரப்பி, அதன்மூலம் 24,468 ஏக்கர் விவசாய நிலங்களை பாசனம் பெறச்செய்வது திட்டத்தின் நோக்கம்.

இதற்காக ஆறு இடங்களில் நீரேற்று நிலையங்கள் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டன.இதில் மிகமுக்கியமாக  உயரமான, வறட்சிப்பகுதியான அவினாசியிலுள்ள பத்துக்கும் மேற்பட்ட பெரிய குளங்களில் நீர் நிரப்பப்பட உள்ளது.

கொரோனா காலத்தில் கூட ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டபொழுது அன்றைய திரு.எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஒரிசா,பீகார் போன்ற பகுதிகளிலிருந்து தனிவிமானத்தில் பொறியாளர்களையும்,வேலையாட்களையும் அழைத்துவந்து, தடையின்றி திட்டப்பணிகளை நிறைவேற்றி வந்தது.

ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போதைய நிலையில் 96.5%  பணிகள் முடிந்த நிலையில் போதுமான நிதியும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வெறும் 4 கி.மீ  தூரத்திற்கு முள்ளம்பட்டி,நல்லகவுண்டம்பாளையம் மற்றும் காளிங்கராயன்பாளையம் நிலஉரிமையாளர்களுக்கு நிதிவழங்க அரசாணை வழங்காததால் கடந்த மூன்று மாத காலமாக  பணி  தடைபட்டு நிற்கிறது.

பதிக்கப்படவேண்டிய மொத்தக்குழாய்களின் நீளம் 1058 கி.மீ.இவற்றில்  1054 கி.மீ முழுமையாக பதிக்கப்பட்டுவிட்டது.மேற்கூறிய 4 கி.மீட்டர் குழாய் பதிக்கப்படாத காரணத்தால்  ரூ.1,756.88 கோடியில் நிறைவேற்றப்பட்ட  திட்டம் தடைபட்டு நிற்கிறது.2021 ஜனவரி  பொங்கல் தினத்தில் பணி முடிக்கப்பட்டு,பயன்பாட்டிற்கு வரவேண்டிய திட்டம் திமுக அரசின் ஒரு  அரசாணையால் தடைபட்டு நிற்கிறது.

திட்டமிட்டபடி திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் கடந்தாண்டு காவிரியாற்றில் 30 TMC தண்ணீர் உபரியாக சென்றபோது அதைக்கொண்டு மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் குளம்,குட்டைகளை நிரப்பியிருக்க முடியும்.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கீரிட் திட்டத்தை துவக்க துடிக்கும்   திமுக அரசு 96.5% முடிந்துவிட்ட அவினாசி-அத்திக்கடவு திட்டத்திற்கு தடைபோட்டு,தள்ளிப்போடுவது  விவசாயிகளுக்கு செய்யும் துரோகமாகும்.

எனவே தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு அரசாணை வெளியிட்டு, திட்டத்தை நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டும்.தாமதிக்கும் பட்சத்தில் மீண்டும் முடிவுக்கு வந்த 60 ஆண்டு கால அத்திக்கடவு-அவினாசி போராட்டத்தை துவக்க வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்படும்”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.