சென்னை || ரவுடியை பைக்கில் கடத்தி சென்று வெட்டி படுகொலை செய்த கும்பல் கைது.!

சென்னை: அம்பத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக ரெளடியை இரு சக்கர வாகனத்தில் கடத்திச்சென்று வெட்டிக் படுகொலை செய்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அம்பத்தூர், சண்முகபுரம், கோரை தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 25). இவரது மனைவி சங்கீதா (21). இவர்களுக்கு 7 மாதத்தில் கவின் என்ற ஆண் குழந்தை உள்ளது. தற்போது திருவள்ளூர், வேப்பம்பட்டு, பாரதியார் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

முன்னதாக உதயகுமார் அம்பத்தூர் காவல் நிலைய பதிவேட்டில் ரெளடியாக இடம் பெற்று உள்ள நிலையில் நேற்று மதியம் உதயகுமார் தனது தாய் லதாவை பார்க்க சண்முகபுரம் வந்த அவரை சிலர் பைக்கில் கடத்திச் சென்றதாக, லதா அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் மூலமாக தீவிர விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், உதயகுமாரை கடத்திச் சென்று சிவப்பிரகாசம் நகர், தாமரைகுளம் அருகே முட்புதரில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து இருந்தது தெரியவந்தது. 

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த அப்புன் என்ற பூவராகவன்(36), சரண் (20), ராமமூர்த்தி (22), மாரிஸ் (20), பிராங்கிளின்(23), முகுந்தன் (20), எலியா சாமுவேல் (20) மாணிக்கம் (24), வினோத்குமார் (40) ஆகிய 9 பேர்களை இன்று கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், உதயகுமாரின் நண்பர் ஜீவா என்பவரை, மோசஸ், லாரன்ஸ், எலியா சாமுவேல் தாக்கியுள்ளனர். இதனை உதயகுமார் மோசஸ் வீட்டுக்குச் சென்று அவரது தாயார் ராஜலட்சுமியிடம் தட்டிக் கேட்டு தகராறு செய்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த மோசஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து உதயகுமாரை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. 

இந்த கொலை வழக்கு சம்மந்தமாக மோசஸ், எலியாஸ், லாரன்ஸ் ஆகிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.