தமிழக பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 3 வாரமாக நடத்தப்பட்டு வந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதிநாளில் தொழிற் படிப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
பொதுத்தேர்வு முடிந்ததை அடுத்து பெரும்பாலான பள்ளிகளில் பிரிவு உபச்சார விழாக்கள் நடைபெற்றன. மாணவர்கள் வருத்தம் கலந்த மகிழ்ச்சியுடன் பள்ளியை விட்டு விடைபெற்று சென்றனர். பிளஸ்-2 விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஜூன் 1 முதல் 8-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளன. இதில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். அதைத் தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் ஜூன் 23-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.