“தினமும் இறப்பதைவிட ஒரு முறை இறப்பதே மேல்..!" – வரதட்சணை கொடுமையால் விபரீத முடிவெடுத்த 3 சகோதரிகள்

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தில் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள், மாமியாரின் வரதட்சணை கொடுமையால், தங்களின் 4 வயது குழந்தை மற்றும் பிறந்து 27 நாள்களே ஆன கைக்குழந்தையுடன், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சோகம் என்னவென்றால், தற்கொலை செய்துகொண்ட 3 சகோதரிகளில், 2 பேர் கர்ப்பமாக இருந்துள்ளனர்.

இறந்துபோன, கலு மீனா(25), மம்தா (23), கமலேஷ் (20) ஆகிய சகோதரிகள், ஜெய்ப்பூர் மாவட்டத்திலுள்ள சாபியா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களை திருமணம் செய்திருக்கின்றனர். திடீரென ஒரு நாள், 3 சகோதரிகளும் காணாமல் போய்விட்டனர். அதைத் தொடர்ந்து, மே 25-ம் தேதி அவர்கள் காணாமல் போய்விட்டதாக, உள்ளூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்த அவர்களின் உறவினரான ஹேம்ராஜ் மீனா, மூவரும் வரதட்சணைக்காக அடித்துத் துன்புறுத்தப்பட்டதாக போலீஸில் கூறியுள்ளார். இந்த நிலையில், அவர்கள் மாயமான 4 நாள்களுக்குப் பிறகு, நேற்றைய தினம் துடு என்ற கிராமத்தில் உள்ள கிணற்றில், 3 சகோதரிகள் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களை போலீஸார் மீட்டுள்ளனர்.

வரதட்சணை கொடுமை

இதில், தற்கொலைக்கான முறையான குறிப்புகள் ஏதுமில்லையென்றாலும், தற்கொலை செய்துகொண்டவர்களில் இளைய சகோதரியான கமலேஷ் இறப்பதற்கு முன்னர் தன்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், “நாங்கள் இப்போது செல்கிறோம், நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். எங்கள் மாமியார் எங்களை துன்புறுத்துகிறார். எங்களின் மரணத்துக்கு அவர்தான் காரணம். தினமும் இறப்பதைவிட ஒரு முறை இறப்பது நல்லது. எனவே தான் நாங்கள் ஒன்றாக சாக முடிவு செய்துள்ளோம். எங்கள் மரணத்துக்கு எங்கள் பெற்றோரைக் குறை கூறாதீர்கள்.” என இந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில், தற்கொலை செய்துகொண்ட சகோதரிகளின் 3 கணவர்கள் மற்றும் மாமியார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும், தனியார் ஊடகம் ஒன்றுக்கு போலீஸார் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.