புதுடில்லி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், அங்கு 1ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே துவங்கும் என வானிலை மையம் கணித்திருந்தது.
இந்நிலையில், இன்று( மே 29) தென்மேற்கு பருவமழை துவங்கியதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இதனால், வரும் 1ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
இதனிடையே சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதால், இன்று, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
30, 31, ஜூன் 1, 2 தேதிகளில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39- 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய ே லசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39- 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28- 29 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றும், நாளையும் லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் – தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.