ஆதார் கார்டு நகலை யாரிடமும் வழங்க வேண்டாம்- மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி:
பொதுமக்கள் தங்கள் ஆதார் கார்டு நகலை, எந்தவொரு நிறுவனத்திடமும் வழங்கவேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. அதில், கூறியிருப்பதாவது:-
ஆதார் கார்டு நகல் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதால், அதை ஆதார் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடம்  வழங்க வேண்டாம். 
ஓட்டல்கள் அல்லது திரையரங்குகள் போன்ற உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள், பொதுமக்களிடம் இருந்து ஆதார் கார்டுகளின் நகல்களை சேகரிக்கவோ வைத்திருக்கவோ அனுமதி இல்லை. ஆதார் சட்டம் 2016ன் கீழ் இது குற்றம் ஆகும். தனியார் நிறுவனம் உங்களின் ஆதார் கார்டை பார்க்க வேண்டும் என்று கூறினாலோ, அல்லது உங்கள் ஆதார் கார்டு நகலைப் பெற விரும்பினாலோ, ஆதார் ஆணையத்திடம் இருந்து சரியான உரிமம் அவர்களிடம் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவேண்டும்.
பிரவுசிங் சென்டர்கள் போன்ற பொது மையங்களில் இ-ஆதார் டவுன்லோடு செய்வதை தவிர்க்கவேண்டும். டவுன்லோடு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டால், தேவையான நகல் எடுத்ததும், கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்ததை நிரந்தரமாக டெலிட் செய்துவிடவேண்டும். 
மேலும், ஆதார் கார்டு நகலை சமர்ப்பிப்பதற்கு பதிவாக, ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை மட்டும் காட்டும் ‘மாஸ்க் ஆதார் கார்டை’ (masked Aadhaar card) பயன்படுத்தலாம். இந்த மாஸ்க் ஆதார் கார்டை, ஆதார் இணையதளத்தில் இருந்து (https://myaadhaar.uidai.gov.in/) டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.