லுக் அவுட் நோட்டீஸ் அறிவித்த நிலையில் நடிகை வெளிநாடு செல்ல அனுமதி: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

மும்பை: லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை ஜாக்குலின் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக கூறிய புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு ெடல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கும் தொடர்பு இருப்பதால், அவர் மீதும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், அபுதாபியில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க வேண்டும் என்பதால், டெல்லி நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். அப்போது நடிகையின் வக்கீல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ ஜாக்குலின் மிகப் பெரிய பாலிவுட் நடிகை. அவர் பல சர்வதேச நிகழ்ச்சிகளுக்கு அவ்வப்போது அழைக்கப்படுவார். ஆனால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, அபுதாபியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு அனுமதியளிக்க வேண்டும்’ என்று கூறினார். இந்த மனுவின் அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வரும் 31ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை  ஜாக்குலின் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது என்று உத்தரவிட்டார். அதனால், அவர் அபுதாபி நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில் வெளிநாடு செல்ல முயன்ற ஜாக்குலின், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார். சமீபத்தில் ஜாக்குலினின் ரூ.7.27 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இவருக்கு சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், பல கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.