கணவனை கொலைசெய்து புதைத்த மனைவி – 9 மாதத்திற்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக்கூடு

திருமணத்தை மீறிய உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கணவனை மனைவியே அடித்துக் கொலைசெய்து புதைத்துவிட்டு கொலையை மறைத்த சம்பவம் கடலூரில் நடந்துள்ளது. 9 மாதத்திற்கு பிறகு உடல் எலும்புக்கூடாக தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. 
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு காவல்நிலையப் பகுதிக்கு உட்பட்ட எஸ்.புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜசேகர். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திருமணமாகி 18 ஆண்டுகளுக்குப் பிறகு அடிக்கடி ராஜசேகருக்கும் விஜயலட்சுமிக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. விஜயலட்சுமிக்கு அதே ஊரைச் சேர்ந்த மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதுதான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
image
இந்நிலையில் 9 மாதத்திற்கு முன்பு ராஜசேகர் திடீரென காணாமல் போயுள்ளார். ராஜசேகர் தன்னிடம் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டார் என விஜயலட்சுமி ஊர் முழுவதும் கூறி வந்துள்ளார். ஆனாலும் ராஜசேகரின் உறவினர்களுக்கு இது சந்தேகத்தை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று விஜயலட்சுமியை தீவிரமாக விசாரித்தபோது அவர் தனது கணவர் ராஜசேகரை மோகனுடன் சேர்ந்து கொன்று விவசாய நிலத்தில் புதைத்து வைத்ததாக கூறியுள்ளார்.
image
இது சம்பந்தமாக நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து இன்று வருவாய் துறையினர் முன்னிலையில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக்குழு வரவழைக்கப்பட்டு 9 மாதத்துக்கு முன்பு கொலைசெய்து புதைக்கப்பட்டு இருந்த இடத்திலிருந்து ராஜசேகரின் எலும்புக்கூட்டை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
image
இது அக்கிராமத்தில் மிகப்பெரிய பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. கட்டிய கணவன் திருமணத்தை மீறிய உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனைவியே அவரை அடித்துக் கொலைசெய்து புதைத்துவிட்டு 9 மாதமாக நாடகமாடியது அனைவர் மத்தியிலும் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விஜயலட்சுமிக்கு உடந்தையாக இருந்த மோகனை போலீசார் தற்போது தேடி வருகிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.