இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்…

இலங்கையின் 24ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து, ஜனாதிபதி அவர்களினால் விக்கும் லியனகே அவர்களிடம் இந்த நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.

தற்போது இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரியாக இருக்கும் விக்கும் லியனகே அவர்கள், நாளை (ஜூன் 01)  இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதன் மூலம், லுதினன் ஜெனரலாக பதவி உயர்வு பெறவுள்ளார்.

மாத்தளை விஜய கல்லூரியில் கல்வி கற்ற விக்கும் லியனகே அவர்கள், 1986ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் கெடட் அதிகாரியாக இணைந்தார். விக்கும் லியனகே அவர்கள், தியத்தலாவ இலங்கை இராணுவ கல்விக் கல்லூரி மற்றும் பாகிஸ்தான் இராணுவ அகாடமி ஆகியவற்றிலிருந்து தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்று, இரண்டாவது லுதினனாக கஜபா படைப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டார்.

விக்கும் லியனகே அவர்கள், தனது 35 வருட புகழ்பெற்ற இராணுவப் பணியின் போது, 4ஆவது கஜபா படைப்பிரிவின் ​​கட்டளை அதிகாரி, படையணி கட்டளை அதிகாரி, கட்டளை அதிகாரி, பலசேனா, சேனாங்க, பாதுகாப்புப் படை கட்டளை பதவி உள்ளிட்ட பதவி நிலை பதவிகள் மற்றும் பல்வேறு ஆலோசகர் பதவிகளையும் வகித்துள்ளார். அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு மற்றும் தொழில் பயிற்சி பாடநெறிகளைத் தொடர்ந்துள்ளார்.

திரு.லியனகே அவர்கள் மனிதாபிமான நடவடிக்கையின் போது 57 மற்றும் 56ஆவது படையணிகளின் 8ஆவது கஜபா படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்ததோடு, எல்ரிரிஈ பயங்கரவாதத்திற்கு எதிராக பல்வேறு வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். ரணவிக்ரம, ரணசூர பதக்கம், கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

31.05.2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.