ஆர்யன் கான் வழக்கில் விசாரணை நடத்திய அதிகாரி சென்னைக்கு இடமாற்றம்

மும்பை: ஆர்யன் கான் வழக்கில் விசாரணை நடத்திய அதிகாரி சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த ஆண்டு, சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் சிலரும் கைதாயினர்.

மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டார். வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க அவர் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்ததையடுத்து, மும்பையில் உள்ள பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநரகத்துக்கு அவர் மாற்றப்பட்டார்.

இந்நிலையில், ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஆதாரம் இல்லை என்று விசாரணைக் குழு அறிக்கை அளித்ததையடுத்து வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த அதிகாரி சமீர் வான்கடே உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சமீர் வான்கடே மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி நிதித்துறை அமைச்சகத்திற்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது.

இதையடுத்து, பகுப்பாய்வு மற்றும் இடர்பாடு மேலாண்மை இயக்குநரகத்தின் மும்பை பிரிவில் பணியாற்றி வந்த சமீர் வான்கடே வரிசேவை இயக்குநரகத்தின் சென்னை பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.