கணவரை பிரிந்த பெண்; பாலியல் வன்கொடுமை, 6 முறை கருகலைப்பு – கடை உரிமையாளர் வீட்டின் முன் தீக்குளிப்பு

ஈரோடு மாவட்டம், கர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரோஜா (வயது 37, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

தீக்குளித்த பெண்

அங்கிருந்தபடியே, சிமெண்ட், டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடை உரிமையாளர் வீடு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ளது. திடீரென உரிமையாளர் வீட்டுக்கு வந்த பெண், உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம்

தொடக்கத்தில் அந்தப் பெண் நீண்ட நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளதாகவும், அதற்கு சிகிச்சை பெற கடையின் உரிமையாளரிடம், பணம் கேட்டு அவர் வீட்டுக்கு சென்றதாகவும் கூறப்பட்டது. அவர் பணம் கொடுக்க மறுக்கவே பெண் தீக்குளித்ததாக கூறப்பட்டது.

இதுகுறித்து அந்தப் பெண் கடிதம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “நான் கடந்த 11 ஆண்டுகளாக ‘விநாயகா செராமிக்ஸ் என்ற சிமெண்ட் அண்ட் டைல்ஸ்’ கடையில் வேலை பார்த்து வருகிறேன். கடை உரிமையாளர் நவநீதன் என் குடும்ப சூழலை பயன்படுத்தி என்னை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்தார்.

தீக்குளித்த பெண்

இந்த விஷயம் அவர் மனைவிக்கும் தெரியும் . அவர்களுக்கு குழந்தை இல்லை. அதன் காரணமாக என்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உல்லாச வாழ்க்கையை அனுபவிப்பார். இதுகுறித்து அவர் உறவினர்களிடம் சொன்னபோது, அவர்களும் என்னை மிரட்டினர்.

என்னை போல அப்பாவி பெண்கள் வாழ்க்கையில் இனிமேல் இது போன்று நடக்கக்கூடாது. எனக்கு ஆறுமுறை கருகலைப்பு நடந்துள்ளது. என் மரணத்துக்கு நவநீதன் மற்றும் அவர் குடும்பத்தினர் தான் காரணம். என் குடும்பத்துக்கு எதுவும் தெரியாது. அவர்கள் பணம் பலம் உள்ளவர்கள் எனக்கு நியாயம் கிடைக்கவேண்டும். இனிமேல் அப்பாவிகள் இழக்கக் கூடாது.

பாலியல் வன்கொடுமை

கடைசி இறப்பு நானாக இருக்க வேண்டும். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதுவரை அவர்கள் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர்கள் பொய் சொன்னால் ஏற்றுக் கொள்ளாதீர்கள்.” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸாரிடம் கேட்டபோது, “பாலியல் தொல்லை காரணமாகவும் அந்தப் பெண் இந்த முடிவை எடுத்திருக்கலாம். அதன் காரணமாக, இந்த வழக்கில் கொலைக்கு தூண்டியதாக சில பிரிவுகளை மாற்றி விசாரித்து வருகிறோம்.

கோவை அரசு மருத்துவமனை

இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண்ணின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.