பாடகர் கேகே மரணம் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் வழக்கு: உடற்கூறாய்வு செய்ய திட்டம்

பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 53.

தமிழ் திரைப்படங்களில் சுமார் 66 பாடல்களை அவர் பாடியுள்ளார். காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க), ஸ்ட்ராபெர்ரி கண்ணே (மின்சார கனவு) உள்ளிட்ட பாடல்கள் இதில் அடங்கும்.

இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழா ஒன்றில் பங்கேற்றுள்ளார் கேகே. அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பியுள்ளார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த காரணத்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது திடீர் மறைவுக்கு காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவரது மரணம் இயற்கைக்கு மாறானது எனக் கூறி கொல்கத்தா பூ மார்க்கெட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தினர் ஒப்புதலைப் பெற்று உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில் கேகே மேடையில் ஏசி வேலை செய்யாததால் தனக்கு வியர்த்துக் கொட்டுவதாகக் கூறும் வீடியோ ஒன்றும், நிகழ்ச்சி முடிந்தத்து தனது அசவுகரியத்தை கூறி வேகவேகமாக கிளம்பிச் செல்லும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.